Archives: ஜூன் 2024

உனக்கென்ன

"அவளுக்குத் திராட்சை லாலிபாப், எனக்கு மட்டும் ஸ்ட்ராபெரி லாலிபாப்பா?" என் சகோதரியின் ஆறு வயது மகள் கேட்டாள். குழந்தைகள், தாங்கள் பெறுவதையும் பிறர் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, என் சகோதரியின் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சித்தியாக , நான் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.

நானும் சில சமயங்களில் தேவன் எனக்குக் கொடுப்பதைப் பிறருக்குக் கொடுக்கப்பட்டதோடு ஒப்பிடுவேன். "எனக்கு ஏன் இது, அவளுக்கு மட்டும் அது?" என்று தேவனைக் கேட்டிருக்கிறேன். கலிலேயா கடலோரம் இயேசுவிடம் சீமோன் பேதுரு கேட்டதை என் கேள்வி எனக்கு நினைவூட்டுகிறது. பேதுரு தன்னை முன்பு மறுதலித்ததற்காக இயேசு அவனை மன்னித்தார். இப்போது ஒரு இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் தேவனை பேதுரு மகிமைப்படுத்தப் போவதாகக் கூறினார் (யோவான் 21:15-19). இருப்பினும், தம்மைப் பின்தொடரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு ஆம் என்று பதிலளிப்பதற்குப் பதிலாக, பேதுரு, “இவன் [யோவான்] காரியம் என்ன?” என்று கேட்டார். (வ. 21).

அதற்கு இயேசு, "உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்." (வ. 22). இயேசு நமக்கும் அதையே சொல்வார் என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வின் வழிகாட்டுதலை ஏற்கனவே அவர் நமக்கு அருளியிருக்கையில், ​​நம்மில் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நாம் நமது பாதையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது, மாறாக நாம் அவரைப் பின்பற்றினால் போதும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆதித்திருச்சபையின் தைரியமான தலைவராகத் தேவனைப் பின்பற்றினார். தீய பேரரசன் நீரோவின் கீழ் அவர் அச்சமின்றி மரணத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நாமும் தேவனைப் பின்பற்றுவதில் உறுதியாகவும், கேள்விக்கு இடமில்லாமல் அவருடைய அன்பையும் வழிநடத்துதலையும் நம்புவோமாக.

 

நீ பிரியமானவன்(ள்)

தன் சோகத்தை வெளிப்படுத்த, அந்த இளம் பெண் மாலினி, ஒரு மரத் துண்டில், "“உண்மையைச் சொல்வதானால், நான் சோகமாக இருக்கிறேன். யாரும் என்னுடன் சேர விரும்பவில்லை, என்னை நேசிக்கும் ஒரே நபரையும் நான் இழந்துவிட்டேன். நான் தினமும் அழுகிறேன்" என்றெழுதி எழுதி பூங்காவில் வைத்துவிட்டாள்.

யாரோ ஒருத்தி அந்தக் குறிப்பைக் கண்டெடுத்தபோது, ​​பூங்காவிற்கு ஒரு பெரிய எழுத்துப் பலகையைக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் எண்ணங்களை மாலினிக்காக எழுதச் சொன்னாள். அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம்", "தேவன் உன்னை நேசிக்கிறார்", "நீ பிரியமானவள்" என்றெல்லாம் பல ஆதரவான வார்த்தைகளை எழுதிச் சென்றனர்.  பள்ளி முதல்வரும் "அவளிடம் உள்ள வெறுமை நிரம்பும்படி அவளுக்கு உதவிட நாம் எடுக்கும் சிறிய முயற்சி இது. அவள் நம் அனைவரையும் பிரதிபலிக்கிறாள், ஏனெனில் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோகத்தையும் துன்பத்தையும் அனுபவிப்போம் அல்லது அனுபவிக்கிறோம்" என்றார்.

"நீ பிரியமானவள்" என்ற வார்த்தை, மோசே இறப்பதற்குச் சற்று முன்பு  இஸ்ரவேல் கோத்திரமான பென்யமீனுக்கு அளித்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்" (உபாகமம் 33:12). மோசே தேவனுக்காக ஒரு வலிமையான தலைவராக இருந்தார், எதிரி நாடுகளைத் தோற்கடித்தார், பத்து கட்டளைகளைப் பெற்றார், தேவனைப் பின்பற்ற அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அவர்களைத் தேவனின் கண்ணோட்டத்தில் கண்டு மரித்தார். பிரியமானவன் என்ற வார்த்தையை நாமும் நமக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இயேசு கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் அவருக்கு "பிரியமானவர்கள்" என்ற சத்தியத்தில் உறுதியாக இளைப்பாறிட  அவர் நமக்கு உதவுவதால், மாலினியின் புதிய நண்பர்களைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க முற்படுவோம்.

 

நம்பிக்கையான எதிர்காலத்தைப் பார்த்தல்

2005 இல் கத்ரீனா புயலின் பேரழிவிற்குப் பிறகு, நியூ ஆர்லியன்ஸ் மெதுவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. லோயர் நைந்த் வார்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், கத்ரீனாவின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதை மாற்ற பர்னெல் காட்லன் பணியாற்றினார். நவம்பர் 2014 இல், கத்ரீனாவுக்குப் பிறகு லோயர் நைந்த் வார்டில் முதல் மளிகைக் கடையைத் திறந்தார். "நான் கட்டிடத்தை வாங்கியபோது, ​​​​எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றெண்ணினார்கள். ஆனால் எனது முதல் வாடிக்கையாளரோ அழுது “தனது சுற்றுப்புறம் திரும்பக் கிடைக்குமென்று ஒருபோதும் நினைத்ததில்லை" என்றதை காட்லன் நினைவு கூர்ந்தார். அவரது தாயார் தனது மகன் “நான் பார்க்காத ஒன்றைப் பார்த்தான்.  அந்த வாய்ப்பை பயன்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

ஏசாயா தீர்க்கதரிசிக்கு, அழிவினூடே எதிர்பாராத நம்பிக்கையான எதிர்காலத்தைக் காணத் தேவன் உதவினார். "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல்" (ஏசாயா 41:17) இருப்பதால் "வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்(குவேன்)" (வ.18) என்று தேவன் வாக்குப் பண்ணினார். பசிக்கும், தாகத்திற்கும் பதிலாக, அவருடைய ஜனங்கள் மீண்டும் ஒருமுறை செழுமையை அனுபவிக்கும்போது, ​​"கர்த்தருடைய கரம் அதைச்செய்தது" (வ. 20) என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அவரே இன்றும் புனரமைப்பின் ஆக்கியோன், "சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு" (ரோமர் 8:20) , சுதந்திரம் என்ற எதிர்கால நிலைக்கு உருவாக்கும் பணியில் கிறிஸ்து ஈடுபட்டுவிட்டார். அவருடைய நற்குணத்தில் (அன்பில்)நாம் நம்பிக்கை கொள்கையில், ​​நம்பிக்கை சாத்தியமாகும் எதிர்காலத்தைக் காண அவர் நமக்கு உதவுவார்.

 

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப்  பலர் கருதுகின்றனர். 

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை   நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது.  ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம்   கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், ​​வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா்

விமானப் பணிப்பெண் ஒருவர் உள்நாட்டு விமானத்திற்கான தனது முன்னோட்டச் சோதனைகளை மேற்கொண்டபோது, ​​ஒரு பயணி ஒருவர், பயணத்தைப் பற்றி கவலையுடனும் பயத்துடனும் இருப்பதைக் கண்டார். அவளுக்கு அருகே அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, விமானச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளைச் சமாதானப்படுத்தினார். "நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினால், அதின் காரியம் எங்களைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால்,  'என்னவாயிற்று? என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று நான் உதவ விரும்புகிறேன்” என்றார்.  இந்த கரிசனையான அக்கறை, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று இயேசு சொன்னதைப் பற்றிய ஒரு சித்திரமாக இருக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவை ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது, ஆனால் அது சீடர்களின் இதயங்களில் உணர்ச்சி பெருக்கத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உருவாக்கும் (யோவான் 14:1). எனவே உலகில் தனது பணியை நிறைவேற்ற அவர்கள் தனித்து விடப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” (வ. 16), அவர் அவர்களுடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். ஆவியானவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்து, கிறிஸ்து செய்த மற்றும் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வ. 26). கடினமான காலங்களில் அவர்கள் அவரால் "ஆறுதல்" (அப்போஸ்தலர் 9:31) அடைவர்.

இந்த வாழ்க்கையில் அனைவரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் உட்பட) கவலை, பயம் மற்றும் துக்கத்தின் கொந்தளிப்பை அனுபவிப்பார்கள். ஆனால் அவர் இல்லாத நிலையில், நமக்கு ஆறுதல் அளிக்கப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று அவர் வாக்களித்துள்ளார்.

உள்ளிருந்து மறுருபமகுதல்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில், மேற்கு லண்டனில் உள்ள இருபத்தி நான்கு மாடி கிரென்ஃபெல் டவர் கட்டிடத்தில் தீ பரவி எழுபது பேரின் உயிர்களைப் பலியாக்கியது. கட்டிடத்தின் புதுப்பித்தலின் பகுதியாக, வெளிப்புறத்தை மூட பயன்படுத்தப்பட்ட உறைப்பூச்சுதான் தீப்பிழம்புகள் மிக விரைவாகப் பரவுவதற்கான முதன்மைக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த பொருள் வெளியில்தான் அலுமினியம், ஆனால் பற்றக்கூடிய நெகிழி அதின் நடுவில் கொண்டிருந்தது.

அத்தகைய ஆபத்தான பொருள் எவ்வாறு விற்கப்பட்டது, நிறுவப்பட்டது? இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள், இது தீ பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்ததை வெளியிடத் தவறினர். மேலும் வாங்குபவர்கள், பொருளின் மலிவான விலைக் குறியீட்டால், எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். பளபளப்பான உறை வெளிப்புறத்தில் நன்றாகத் தோற்றமளித்தது.

இயேசுவின் சில கடுமையான வார்த்தைகள் மத போதகர்களை நோக்கியே  வந்தது, அவர்கள் அழகாகத் தோன்றும் வெளிப்புறத்தில் அநீதியை மறைப்பதாகக் குற்றம் சாட்டினார். அவை " வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்", " புறம்பே அலங்காரமாய்" தோன்றும், ஆனால் உள்ளே மரித்தவர்களின் எலும்புகளினால் நிறைந்திருக்கும்  (மத்தேயு 23:27) என்றார். "நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்" (வ. 23) பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் அலங்காரமாய்க் காணப்படுவதற்குக் கவனம் செலுத்தினர். "போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தை" சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினர், ஆனால் உள்ளேயிருந்த "கொள்ளை, அநீதி" ஆகியவற்றை விட்டுவிட்டனர் (வ. 25).

நம்முடைய பாவத்தையும்,உள்ள முறிவையும் தேவனுக்கு முன்பாக நேர்மையாகக் கொண்டுவருவதை விட "அலங்காரமாய் தோன்றுவதில்” கவனம் செலுத்துவது எளிது. ஆனால் அழகாகத் தோற்றமளிக்கும் வெளிப்புறமானது, அநீதத்தின் இதயம் உண்டாக்கும் ஆபத்தை மாற்றாது. நம் அனைவரையும் உள்ளிருந்து மாற்றும்படி விட்டுக்கொடுக்க, தேவன் நம்மை அழைக்கிறார் (1 யோவான் 1:9).

கிளையாகிய இயேசு

சிவப்பாய் காட்சியளித்த மலைகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கிறது அழகிய ஹோலி கிராஸ் சிற்றாலயம். அதற்குள் நுழைந்தவுடன், சிலுவையில் இயேசுவின் வித்தியாசமான சிற்பம் உடனடியாக ஈர்த்தது. ஒரு பாரம்பரிய சிலுவைக்குப் பதிலாக, இயேசு ஒரு மரத்தின் கிளைகளில் இரண்டு தண்டுகளில் சிலுவையில் அறையப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது. கிடைமட்டமாகத்  துண்டிக்கப்பட்ட, காய்ந்த தண்டு, தேவனை நிராகரித்த பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குறிக்கிறது. மற்ற தண்டு மேல்நோக்கி வளர்ந்து கிளைகள்; யூதாவின் செழிப்பான கோத்திரத்தையும், தாவீது ராஜாவின் குடும்ப வம்சத்தையும் குறிக்கிறது.

குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலை, இயேசுவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூதாவின் கோத்திரம் சிறையிருப்பில் வாழ்ந்தாலும், எரேமியா தீர்க்கதரிசி தேவனிடமிருந்து ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொடுத்தார்: "நான்.. சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்" (எரேமியா 33:14) "அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (வ. 15) என்று மீட்பரை குறித்தது. அவரை ஜனங்கள் அடையாளம் காண்பதற்கான ஓர் வழி, "தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்" (வ. 15) என்பதே. அதாவது, மீட்பர் தாவீது ராஜாவின் வழித்தோன்றலாக இருப்பார்.

இயேசுவின் வம்சாவளியின் விவரங்களில், தேவன் வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்ற முக்கியமான உண்மையை இச்சிற்பம் திறமையாக வெளிக்காட்டுகிறது. அதிலும், கடந்த காலத்தில் அவருடைய உண்மைத்தன்மையானது  எதிர்காலத்தில் நமக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்ற உறுதியளிக்கிறது என்பதற்கான நினைவூட்டல்.